Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே..!
Permalink  
 


ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே

August 27, 2008 – 11:34 am

நகைச்சுவை

ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே என்று நிறுவும்பொருட்டு பிரபல தோமாகிறித்தவ ஆய்வாளரும் அதன் நிறுவனருமான முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் எழுதிய ஆய்வுகட்டுரையின் சுருக்கத்தை இங்கே அளிக்கிறோம்.

முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் ஏற்கனவே தொல்காப்பியம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள்,ஐஞ்சிறு காப்பியங்கள், கம்பராமாயணம்,பெரியபுராணம், திருவிளையாடல்புராணம், அரிச்சந்திரபுராணம், நளவெண்பா, கலிங்கத்துப்பரணி, கச்சிக்கலம்பகம்,நாலாயிர திவ்வியபிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமிபிள்ளைத்தமிழ், கூளப்பநாயக்கன் காதல், விறலிவிடுதூது, பாரதியார் பாடல்கள் ஆகியவை கிறித்தவ இலக்கியங்களே என்பதை ஐயம்திரிபற அமெரிக்காவில் விளக்கி அங்குள்ள துரைத்தனத்தார் அதை ஏற்று கைதட்ட வைத்தவர் என்பதை இங்கே குறிப்பிடவேண்டியுள்ளது. தேம்பாவணியும் இரட்சணிய யாத்ரீகமும்கூட கிறித்தவ நூல்களே என்று அவர் நிரூபித்திருக்கிறார்.

அத்துடன் அன்னார் அவர்களின் புதல்வி முனைவர்.வேதபலா அவர்கள் புதுமைப்பித்தன் கதைகள் க.நாசு.நாவல்கள், கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள்,மௌனி விடுகதைகள், ஜெயகாந்தன் கு.அழகிரிசாமி ப.சிங்காரம் படைப்புகள் ஆகியவற்றுடன்; மின்னஞ்சல்களையும் சேர்க்கும்போது எழுபதாயிரம் பக்கங்களுக்கு நீளும் சுந்தரராமசாமி எழுத்துக்கள் அனைத்துமே கிறித்தவ இலக்கியமே என்று ஆணித்தரமாக நிறுவியிருப்பதை சுட்டிக்காட்டவேண்டும்.

இவ்வாய்வுகள் முற்றிலும் உண்மை என்பதை ஆய்வேடுகளின் கீழே அவர்கள் கைநாட்டு போட்டு அதற்கு கொங்குஞானி , மாவடுதுறை ஆதீனம் போன்றவர்கள் சாட்சிக்கையெழுத்தும் போட்டிருக்கிறார்கள். சாரு நிவேதிதாவின் எழுத்துக்களும் கிறித்தவ எழுத்துக்களே என்று அவர் தொலைபேசியில் ரகசியமாக அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

ஆத்திச்சூடி என்ற பெயர் தவறானது என்று ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது கிபி எட்டாம் நூற்றாண்டுவாக்கில் ஆரியபிராமண கொலைவெறியர்களால் திரிக்கப்பட்டது. உண்மையில் அத்திசூடி என்றுதான் இருக்க வேண்டும். அது அத்திப்பழத்தையே குறிக்கிறது. ஆத்திச்சூடி நூலின் முதல் செய்யுளான காப்புச்செய்யுளில் உள்ள  ‘ அத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே’ என்ற வரியானது அப்படியே ஒரு கிறித்தவப் பாடல் வடிவில்தான் உள்ளது. [எத்தி எத்தி என்று இரண்டாம் வரி இருக்க வேண்டும்]  அகரவரிசையில் உள்ள ஆத்திச்சூடியின் முதல் எழுத்து ‘ஆ’வாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை ஆய்வாளர் கவனிக்கவேண்டும், இதுவே அது அத்திசூடிதான் ஆத்திசூடி அல்ல என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரம் என்று முனைவர் ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்

அத்திப்பழம் உண்பதைப்பற்றிய எந்த தகவலும் தமிழிலக்கிய மரபில் இல்லை. அதேசமயம் பைபிளில் அத்திப்பழம் புனித உணவாக பல இடங்களில் சொல்லப்படுகிறது. அத்திப்பழத்தை கையில் வைத்துக்கொண்டு அதைத்தின்றபடியே மலைப்பிரசங்கத்தை ஏசு நிகழ்த்தியிருக்க வாய்ப்புள்ளது.ஆகவே அத்திச்சூடி என்று குறிக்கப்படுபவர் ஏசுபெருமானே. ‘அத்தி பூத்ததுபோல’ என்ற பழமொழி ஏசு உயிர்த்தெழுந்த அற்புதத்தையே குறிப்பிடுகிறது. ‘அத்திப்பழத்தை புட்டுபார்த்ததுபோல’ என்ற பழமொழி ஏசுவின் புனித உடலை பக்தர்கள் பிய்த்துத் தின்னும் குறியீட்டுச்செயல்பாடை குறிப்பிடுகிறது.

அத்திச்சூடி நூலை எழுதியவர் அவ்வையார் என்று சொல்லப்படுகிறது. இவரது உண்மையான பெயர் ஏவாள் என்பதாகும். அதன் திரிபே அவ்வை. இவர் கன்னியாகவே இருந்தார் என்ற வரலாறு உள்ளதை நாம் கவனிக்கலாம். கன்னிமரபு என்பது கிறித்தவம் அன்றி வேறென்ன? ஆகவே ஈவையார் கிபி ஒன்றாம் நூற்றாண்டுவாக்கில் மயிலையில் புனித தோமையர் நிறுவிய கன்னியர்மடத்தின் தலைவியாக இருக்க வாய்ப்புள்ளது. இவர் ‘எட்டேகால் லெட்சணமே எமனேறும் பரியே’ என்று ஒரு செய்யுள் எழுதியிருப்பதிலிருந்து இவருக்கு ‘விரியன்பாம்புக்குட்டிகளே’ என்றெல்லாம் முச்சந்திப்பிரசங்கம் செய்யும் திறனிருப்பதும் தெரியவருகிறது.

இவரது கதையில் இவர் முருகனுக்கு ஞானப்பழம் கொடுத்ததைப்பற்றி பாடியிருப்பதாக தெரிகிறது. முருகன் என்பது ஏசுவே என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஞானப்பழம் என்பது ஈவாள் ஆதாமுக்குக் கொடுத்த ஞானப்பழம்தானா என்பதை ஆராயவேண்டியிருக்கிறது. பழனிமலையில் ஏசுவானவர் கோவணத்துடன் ஆண்டியாக நிற்பது ஏன் என்பதும் ஆராயத்தக்கது. அவரது உடைகளை  கல்வாரியில் காவலர்கள் பகிர்ந்து எடுத்துக்கொண்டபின் உள்ள நிலையை அது குறிப்பிடுகிறது என்று ஊகிக்கலாம்.

ஆத்திச்சூடியின் முதல் செய்யுள் ‘அறம்செய விரும்பு’ என்று சொல்கிறது. அறம் செய்கிறார்களோ அதைச்செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் விரும்புவது கிறித்தவர்களின் இயல்பு. அதுவே அவர்களின் மதத்தின் முதல்கட்டளை ஆகும் .அதையே இச்செய்யுள் குறிப்பிடுகிறது என்று முனைவர்.ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிறமதங்களில் அறம் என்பது செய்யவேண்டிய ஒன்றாக இருக்கிறதே ஒழிய விரும்பமட்டும் வேண்டிய ஒன்றாக இல்லை.

‘ஆறுவது சினம்’ என்ற செய்யுளானது ஏசுவின் காயங்களையே குறிப்பிடுகிறது என்பது வெள்ளிடைமலை. [இந்த சொல்லாட்சி கல்வாரி மலையை குறிப்பது என்பதும் வெள்ளிடைமலை] சினத்தால் யூதர்கள் உருவாக்கிய ஏசுவின் புண்கள் தெய்வீக அருளால் ஆறுவதை ஈவையார் குறிப்பிடுகிறார்.

‘இயல்வது கரவேல்’ என்ற மூன்றாவது செய்யுள் வெளிப்படையாகவே கிறித்தவம் சார்ந்தது. தங்களால் இயன்றவரை கரைந்தபடியும் கரைத்தபடியும் இருப்பது ஒவ்வொரு கிறித்தவனுக்கும் ஏசுவானவர் விதித்த ஆணித்தரமான கட்டளை அல்லவா?

‘ஈவது விலக்கேல்’ என்பதும் இதையே குறிப்பிடுகிறது. கிறித்தவர்கள் ஒருபோதும் வெளிநாட்டினர் ஈயும் நன்கொடைகளை விலக்கல் ஆகாது.

‘உடையது விளம்பேல்’ என்பதும் இதன் தொடர்ச்சியே. கிறித்தவ நிறுவனங்களில் உடைய செல்வம் என்ன என்பதை பிதாசுதன்பரிசுத்த ஆவியினர் சேர்ந்துவந்து வினவினாலும் சொல்லக்கூடாது.

அடுத்தசெய்யுளான ‘ஊக்கமது கைவிடேல்’ என்பதை வைத்தே அத்திசூடி கிறித்தவ நூல் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக நிரூபித்துவிடலாம். [உள்ளங்கையில் நெல்லிக்காயை வைத்து ஜெபம் செய்வது அராமிக் பண்பாடு என்பதை விளக்க வேண்டியதில்லை] ஊக்கம் + மது என்று பிரித்தால் வரும் அந்த மது என்ன? கிறித்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் மது என்ன? தேவாலயத்தில் ஏசுவின் குருதி என்று கொடுக்கப்படும் அந்த புனிதமது- ஒயின் அல்லவா இங்கே குறிப்பிடப்படுகிறது? இன்றும் ஊக்க மதுவை வழிபாட்டாளர்களுக்கு அளிக்கும் வழக்கம் கத்தோலிக்க தேவாலயங்களில் உள்ளது. அப்போது அந்தக் கோப்பை கைநழுவுவதும் சாதரணம். அப்போது புனிதகுருவானவர் இந்த செய்யுளைத்தான் இப்போதும் சொல்வது வழக்கம்.

‘எண் எழுத்து இகழேல்’ என்ற செய்யுள் குறிப்பிடுவதற்கு ஒரே பொருள்தான் இருக்க முடியும். எண்கள் போடப்பட்ட எழுத்துக்கள் பைபிளில் மட்டுமெ உள்ளன. எந்த இந்திய நூலிலும் அந்த அமைப்பு இல்லை. பழங்காலத்தில் பைபிள் ‘எண்ணெழுத்து’ என்றே அழைக்கப்பட்டிருந்தது என்பதற்கு கல்வெட்டுச் சான்று உள்ளது, கல் ரோமாபுரிக்குக் கொண்டு போகப்பட்டிருக்கிறது. பைபிளை இகழக்கூடாது என்றுதான் புனிதகன்னி ஈவையார் ஆணித்தரமாகச் சொல்கிறார்.

‘ஏற்பது இகழ்ச்சி ‘ என்ற செய்யுளைப் படிக்கும் எவரும் அது கிறித்தவ பண்புநலன் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஓர் உண்மைக்கிறித்தவன் ஒருபோதும் பிறர் சொல்லும் எதையுமே ஏற்கலாகாது என்பதே இச்செய்யுளின் பொருளாகும். அதன் மூலம் அவனுக்கு இகழ்ச்சியே ஏற்படும்.

‘ஐயம் இட்டு உண்’ என்ற செய்யுளையும் நாம் இவ்வாறே காண வேண்டும். பிறரில் ஐயங்களை உருவாக்கி அதைவைத்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இச்செய்யுளின் சாரம். இப்பொருளைக் கொள்ள முடியாத பிராமண வெறியர் ஐயம் என்றால் உணவைப் பகிர்தல் என முற்றிலும் ஆதாரமில்லாத பொருளைக் கொள்வது நகைப்புக்கிடமானது.

‘ஒப்புரவு ஒழுகு’ என்றால் தேவலயங்களில் கிறித்தவர்கள் ஒப்பாக அதாவது சமமாக ஒழுகி வழிபடுவதைக் குறிப்பிடுகிறது. அடுத்தச் செய்யுளில்

‘ஓதுவது ஒழியேல்’ என்பது பைபிளை ஒவ்வொருநாளும் ஓதுக என்றே பொருள்படும்.

‘ஔவியம் பேசேல்’ என்ற செய்யுள் கிறித்தவர்கள் ஒருபோதும் பிற கருத்துக்களை பேசக்கூடாது என்று பொருள்படும். அராமிக் மொழியிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு மொழியிலோ ஔவியம் என்றால் பழிக்கப்பட்டது என்று பொருள் என்பதை இங்கே திட்டவட்டமாகக் குறிப்பிட வேண்டியுள்ளது.

இவ்வளவு தூரம் வந்தபின் கடைசிச் செய்யுள்ளான ‘அ·கஞ் சுருக்கேல்’ என்பதும் கிறித்தவ பொருள் உடையதே என்பதை சொல்ல வேண்டியதில்லை

தமிழர்களே உலகுக்கு மெய்ஞானத்தை கற்பித்தவர்கள். இந்தியாவெங்கும் உள்ள எல்லா மொழிகளும் தமிழில் இருந்து வந்தவையே.

உதாரணமாக பார்+அது என்று தமிழர்கள் சொன்னதனாலேயே பாரதம் என்ற பெயர் வந்தது. இந்தியாவில் இருந்துதான் மெய்ஞானம் சீனா முதலியநாடுகளுக்குச் சென்றது. ‘தமிழ்’ என்ற சொல்லை சீனர்கள் தங்களல் இயன்றவரை சொல்ல முயற்சித்ததன் விளைவே ‘தாவோ’ ஆகும். இந்த கோணத்தில் ஆராயும் எவரும் மாவோ என்ற சொல் மாமன் என்ற சொல்லின் திரிபு என்று கண்டுகொள்ள முடியும்.

ஆகவே தமிழே உலக ஞானத்துக்கு அடிப்படை. தமிழ் ஞானத்துக்கு தாமையர் அடிப்படை.

இந்த உணர்வை அடைந்து ஒன்றே குலம் [ஏசு] ஒருவனே தேவன் என்ற தமிழ்கோட்பாட்டை ஏற்று  புனித தாமையர் மதத்தை மேலும் செம்மைப்படுத்தி அதைத்தழுவி உய்வோமாக.

வாழிநலம் சூழ! ஓம்! அதாவது ஆமேன் !

Thanks to:

http://www.jeyamohan.in/?p=621



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard